கனடிய பொதுத் தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றி!

2025 கனடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை 28ஆம் திகதி நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் மூன்று, கன்சர்வடிவ் கட்சியின் சார்பில் இரண்டு, பசுமை கட்சியின் சார்பில் ஒன்று என மொத்தம் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இவர்களில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மூன்று தமிழர்களும் வெற்றி பெற்றனர். Oakville கிழக்கு தொகுதியில் அனிதா ஆனந்த், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி, Pickering–Brooklin தொகுதியில் ஜுனிதா நாதன் ஆகியோர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

இதுவரை வெளியான உத்தியோகபற்றற்ற முடிவுகளின் அடிப்படையில் அனிதா ஆனந்த் 28,498 (50.4%) வாக்குகளையும், ஹரி ஆனந்தசங்கரி 33,164 (63.9%) வாக்குகளையும்,, ஜுனிதா நாதன் 24,951 (53.2%) வாக்குகளையும் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

இந்தத் தேர்தலில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்று லிபரல் கட்சி சிறுபான்மை ஆட்சி அமைத்துள்ள நிலையில் மீண்டும் அனிதா ஆனந்த், ஹரி ஆனந்தசங்கரி ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் கன்சர்வடிவ் கட்சியின் சார்பில் Markham-Stouffville தொகுதியில் போட்டியிட்ட நிரான் ஜெயநேசன், Markham -Thornhill தொகுதியில் போட்டியிட்ட லியோனல் லோகநாதன், பசுமை கட்சியின் சார்பில் Etobicoke வடக்கு தொகுதியில் போட்டியிட்ட சருன் பாலரஞ்சன் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். 

Exit mobile version