முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரது செயலாளராக கடமை ஆற்றிய லலித் வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
லலித வீரதுங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்ள உள்ளதாக குற்றப் புலானய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீா்வயைற்ற அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சிற்காக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து ஒன்று கால்டன் முன்பள்ளிக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் மேலதிக செயலாளராக கடமையாற்றிய ஒருவரிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.
இதேவேளை, ”சிரிலியே” திட்டம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த பேருந்து குறித்த விசாரணையும் சிரிலியே திட்டம் தொடர்பான விசாரணைகளில் ஓர் பகுதி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சிரிலியே என்ற திட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்ச தொடர்புபட்டிருப்பதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தன.
அந்த வகையில் குறித்த கணக்கு தொடர்பில் ஏழு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
