இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, முன்னெப்போதும் இல்லாத சிறப்பான நிலையை எட்டியுள்ளதாக இலங்கையின் உயர்ஸ்தானிகர் மஹிசினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கிடையில் புதிய கூட்டாண்மைகளை ஆராய்வதற்கான வாய்ப்புகள் மிகச் சிறந்த நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர் மஹிசினி கொலன்னே, நாடு தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளது என்றும், தற்போது “மீட்சி மற்றும் மாற்றத்தின் பாதையில் சீராகச் சென்று கொண்டிருக்கிறது” என்றும் உறுதிப்படுத்தினார்.
இலங்கையின் இந்தப் பயணத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு மகத்தான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எங்கள் ஜனாதிபதியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அவர் மேற்கொண்ட இந்திய விஜயம், அதைத் தொடர்ந்து சில மாதங்களில் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் ஆகியவற்றின் மூலம், இலங்கை-இந்திய உறவுகள் முன்னெப்போதும் இல்லாத ஒரு சிறப்பான நிலையை அடைந்துள்ளன” என்று மீண்டும் வலியுறுத்தினார்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வரலாறு, கலாசாரம், புவியியல் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு தனித்துவமான உறவை இரு நாடுகளின் மக்களும் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாங்கள் இந்தியாவை எங்கள் மிக நெருங்கிய அண்டை நாடு என்று மட்டும் பார்க்கவில்லை, மாறாக எங்களின் மிகவும் இயல்பான வர்த்தகப் பங்காளியாகவும் கருதுகிறோம்,” என்றும் உயர்ஸ்தானிகர் மஹிசினி கொலன்னே நம்பிக்கை தெரிவித்தார்.