பிரித்தானியாவின் தெற்கு பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடந்த தீ வைப்பு தாக்குதலை “வெறுப்பு குற்றம்” என ஐக்கிய இராச்சியத்தில் பொலிஸார் விசாரித்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு சசெக்ஸின் பீஸ்ஹேவனில் உள்ள ஃபிலிஸ் அவென்யூவில் சனிக்கிழமை (04) இரவு 10 மணிக்கு தீ வைப்பு தாக்குதல் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாக, பிரித்தானியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் பள்ளிவாசலின் முன் நுழைவாயில் மற்றும் கார் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல்களில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு முகமூடி அணிந்த ஆண்களின் படங்களையும் அந்த நாட்டு அதிகாரிகள் பகிர்ந்து அவர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
அதிர்ச்சியூட்டும் தாக்குதலால் சமூகம் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக பள்ளிவாசலின் செய்தியாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த வெறுக்கத்தக்க செயல் தங்கள் சமூகத்தையோ அல்லது தங்கள் நகரத்தையோ பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. கருணை, மரியாதை மற்றும் பரஸ்பர ஆதரவின் இடமாக இருந்து வருகிறது.
மேலும் அந்த மதிப்புகளை நாங்கள் தொடர்ந்து உள்ளடக்குவோம்” என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் , பிரிவினையை நிராகரித்து வெறுப்புக்கு ஒற்றுமை மற்றும் இரக்கத்துடன் பதிலளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.