இ-விசா வழக்கு – மீண்டும் மார்ச் 25

முந்தைய அரசாங்கத்தின் போது இ-விசா வழங்கும் செயல்முறையை 2 தனியார் நிறுவனங்களுக்கு மாற்ற அப்போதைய அமைச்சரவை எடுத்த முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை மார்ச் 25 ஆம் திகதி மீண்டும் கூட்ட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் இந்த மனு இன்று (09) விசாரணைக்கு வந்தது. 

முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த உயர் நீதிமன்ற அமர்வு, குறித்த கருத்துக்களை உறுதிப்படுத்த மார்ச் 25 ஆம் திகதி மீண்டும் மனுவை விசாரிக்க உத்தரவிட்டது. 

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.ஏ. சுமந்திரன், பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் தாக்கல் செய்திருந்தனர்.

Exit mobile version