ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் நேற்று (19) மாலை கொழும்பு பாலத்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 21,000 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 30 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவின் இரண்டாம் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அத்துல பாலசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கிராண்ட்பாஸ் பகுதியில் சோதனையிடச் சென்றபோது கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் பாலத்துறை பகுதியில் உள்ள வீட்டிற்கு வரவுள்ளதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, பதுங்கியிருந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை மாத்திரை தொகுதியுடன் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த மாத்திரைகளை மொத்தமாகப் பல்வேறு நபர்களுக்கு விநியோகித்து வந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் என்பதோடு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
