2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பாக வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பரீட்சையில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்தமை தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களால் 4 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 2024 டிசம்பர் 31 அன்று தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பின்படி, அடிப்படை உரிமை மீறலுக்காக பிரதிவாதியான ஐ.ஜி.எஸ்.பிரேமதிலக்க தனது சொந்தப் பணத்திலிருந்து 3 மில்லியன் ரூபாயை அரசாங்கத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்தத் தொகையை தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து நான்கு வாரங்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
குறித்த காலக்கெடுவிற்குள் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தத் தவறியதன் மூலம், அவர் நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்துள்ளதாக மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி அஞ்சன ரத்னசிறி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இதனைப் பரிசீலித்த பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டது.
அத்துடன், எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் ஐ.ஜி.எஸ்.பிரேமதிலக்கவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது.
