தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்ற டில்லி பயணமாகின்றார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக பலமான கூட்டணியை கட்டமைத்துள்ளது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதிமுக தரப்பில் பாஜக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அன்புமணி தலைமையிலான பாமக, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி கூட்டணியை உறுதி செய்துள்ளது.
எனினும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக இன்று டில்லி பயணமாகின்றார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்றும், அதாவது 35 தொகுதிகள் வேண்டும் என்றும் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
