ஜப்பான் வேலைவாய்ப்பு மோசடி: முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட குருணாகலை, மஹவ பிரதேசத்தில் உள்ள மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.


ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதற்காக இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவரிடமிருந்து ரூ. 750,000 பணத்தைப் பெற்றுக்கொண்டு, வாக்குறுதியளித்தபடி வேலை பெற்றுக்கொடுக்கவில்லை என பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது. விசாரணை அதிகாரிகள் உளவாளி ஒருவரைப் பயன்படுத்தி மேற்கொண்ட தேடுதலில், ஜப்பான் மொழிப் பயிற்சியின் போர்வையில் இந்த நிறுவனம் இயங்குவதும், தகுதியற்ற நபர்களுக்கு போலி பல்கலைக்கழக பட்டச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய தேவையான சான்றிதழ்களைக் கள்ளத்தனமாகத் தயாரித்துக் கொடுப்பதும் கண்டறியப்பட்டது.


இதற்கமைய, மஹவ, தலதாகம சந்தியில் இயங்கி வந்த குறித்த இடத்தைச் சுற்றிவளைத்த அதிகாரிகள், அதனை நடத்தி வந்த தம்பதியினரைக் கைது செய்துள்ளனர். அந்த இடத்தை சோதனையிட்ட போது, ஜப்பானில் வேலை வழங்குவதற்கான ஒப்பந்தங்கள், பணப் பற்றுச்சீட்டுகள், பிரசார சுவரொட்டிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.


மடிக்கணினியைச் சோதித்தபோது, பல்வேறு நபர்களின் பெயர்களில் போலியாகத் தயாரிக்கப்பட்ட இலங்கையின் பிரபல பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்கள் மற்றும் பிரபல கட்டுமான நிறுவனங்களின் சேவைச் சான்றிதழ்களை ஒத்த போலிச் சான்றிதழ் மாதிரிகள் கண்டறியப்பட்டன.


கைது செய்யப்பட்ட தம்பதியினர் மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கடும் பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் குறித்த தம்பதியினருக்கு நீதிமன்றினால் வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவங்சவின் மேற்பார்வையில், பணியக விசேட விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.பி. ஆரியசிங்க, பொலிஸ் பரிசோதகர் டி.பி. டி அல்விஸ் மற்றும் சட்ட அமுலாக்கல் அதிகாரி ஸ்ரீனிகா கருணாரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இந்தச் சோதனையில் பங்கேற்றனர்.

Exit mobile version