மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து ஜெய்சங்கர் விளக்கம்

இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ‘Raisina Dialogue 2026’ மாநாட்டில் பேசிய அவர், மனிதாபிமான அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘MILAN 2026’ பயிற்சியில் பங்கேற்க வந்த இளம் ஈரானியக் கடற்படை வீரர்கள், திடீரென வெடித்த போர்ச் சூழலால் இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

உதவி கோரி கொச்சி துறைமுகத்திற்கு வந்த அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியதை நியாயப்படுத்திய அவர், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் வெளிநாட்டு இராணுவப் படைகளின் ஆதிக்கம் ஒரு யதார்த்தமான உண்மை என்றும் சுட்டிக்காட்டினார்.

சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு பொறுப்புள்ள நாடு என்ற ரீதியில் மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளித்தே இந்தியா இந்த முடிவை எடுத்ததாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version