ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இன்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் உள்ள ஷசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, குறித்த சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணை நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
எனவே அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்கு மேலதிக கால அவகாசம் தேவையென அதிகாரிகள் கோரினர்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதவான், இந்த வழக்கினை மீண்டும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த போராட்டக் காலத்தின் போது, ஸ்ரீலங்கா மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான செவனகல பகுதியில் அமையப்பெற்ற சட்டவிரோத கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்திருந்தன.
அந்தச் சொத்துக்களுக்காக, இழப்பீட்டு அலுவலக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து 88 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இழப்பீடாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
