NDB வங்கியில் இடம்பெற்ற பாரிய உள்ளக நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறை நான்காவது சந்தேக நபரை கைது செய்துள்ளது.
சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் மேலும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த வங்கியில் 13.2 பில்லியன் ரூபா முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கு விசாரணையை, தற்போது சிஐடியின் கணினி குற்றப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.
முக்கிய சந்தேக நபர், பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுகள் துறையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, 33, 34, மற்றும் 35 வயதுடைய முதல் மூன்று சந்தேக நபர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மாதம் 14 ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்தச் சம்பவத்தினால் எந்தவொரு வாடிக்கையாளரின் கணக்குகளுக்கோ அல்லது வைப்புகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் வங்கியின் அனைத்துச் சேவைகளும் வழமை போல் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் NDB வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
