ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய டிஜிட்டல் எல்லைப் பாதுகாப்பு முறையான ‘நுழைவு/வெளியேறும் அமைப்பு’ (Entry/Exit System – EES) கடந்த வெள்ளிக்கிழமை முதல் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த புதிய முறையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய முயன்ற ஆயிரக்கணக்கானோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 700 பேர் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரஸ்ஸல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவிற்குப் பயணம் செய்வதை அதிக பாதுகாப்பானதாகவும், எளிமையானதாகவும் மாற்றும் நோக்கில், கடவுச்சீட்டுகளில் முத்திரை குத்தும் பழைய முறைக்கு மாற்றாக இந்த டிஜிட்டல் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில், இதுவரை 52 மில்லியனுக்கும் அதிகமான எல்லைக் கடப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 27,000 முறை நுழைவு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
“EES மூலம், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் யார் நுழைகிறார்கள், எப்போது வெளியேறுகிறார்கள் என்பதை நாங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்துகிறோம்” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை ஆணையர் மேக்னஸ் ப்ரன்னர் தெரிவித்துள்ளார்.
