இலங்கை விஜயம் நிறைவு: இந்திய துணை ஜனாதிபதி நாடு திரும்பினார்

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், நேற்று(20) நுவரெலியாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் தனது பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார்.

நுவரெலியா, சீதா எலிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்துக்கு விஜயம் செய்த துணை ஜனாதிபதி, அங்கு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய இந்த ஆலயம், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஆழமான கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளின் அடையாளமாகத் திகழ்வதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நுவரெலியா – ராகலை பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் மலையக மக்களுக்கான இந்திய வீட்டுத் திட்டப் பணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடிய அவர், வீடுகளின் நிர்மாணப் பணிகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

இலங்கை வந்தடைந்த இந்தியத் துணை ஜனாதிபதி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களையும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மலையகக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து முக்கியப் பேச்சுகளை நடத்தியிருந்தார்.

தனது இரண்டு நாள் முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை நேற்றுமதியத்துடன் நிறைவு செய்துகொண்டு அவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

Exit mobile version