ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை


அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவைக் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று(20) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அவையாவன:-2015ஆம் ஆண்டு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராகப் பணியாற்றிய போது, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாது காலி மாவட்டத்தைச் சேர்ந்த தனது அரசியல் ஆதரவாளர்கள் 134 பேரைத் தொழில்நுட்பக் கல்வித் திணைக்களத்தில் சிற்றூழியர்களாக நியமித்தமை. 

ஒழுக்காற்று காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி பணிப்பாளர் என். யோகராஜாவின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான், முன்னாள் அமைச்சரைத் தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.

அத்துடன் சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டதுடன் வழக்கின் சாட்சியாளர்களுக்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கக் கூடாது என்று அவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை மற்றும் ஏனைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.

Exit mobile version