கொழும்பு பாடசாலையில் பாதுகாப்பு சவால் – அச்சுறுத்தல் சம்பவம் அதிர்ச்சி

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டியவிலுள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து உயர் தர மாணவர்களுக்கு கத்தி முனையில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொட்டாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

பாடசாலையின் சுற்றுச் சுவரை ஏறிக்குதித்து, பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் இரு மாணவர்களின் கழுத்தில் கூரிய ஆயுதத்தை வைத்து மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

பாடசாலையின் மைதான எல்லைக்கு அருகில் உள்ள மாமரம் ஒன்றிலிருந்து, மாணவர்கள் குழுவொன்று மாம்பழம் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவர்களைத் திட்டியுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் குழுவினர் அந்த இளைஞரை நோக்கி கூச்சலிட்டுள்ளனர்.

இதன் போது ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பாடசாலையின் சுவரை ஏறிக்குதித்து உள்ளே வந்து, இரண்டு மாணவர்களைப் பிடித்து அவர்களின் கழுத்தில் கத்தி போன்ற கூரிய ஆயுதத்தை வைத்து மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் பிரதி அதிபரால் கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version