நான்கு முக்கிய விமானச் சேவைகளை முன்கூட்டியே நிறுத்துகிறது ஏர் கனடா

சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளதை அடுத்து, இந்த கோடைகாலத்தில் திட்டமிடப்பட்டிருந்த நான்கு முக்கிய காலமுறை விமானச் சேவைகளை முன்கூட்டியே நிறுத்த உள்ளதாக ஏர் கனடா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து விமான எரிபொருளின் விலை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளதே இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

டொராண்டோவிலிருந்து சேக்ரமெண்டோ மற்றும் சார்லஸ்டன் ஆகிய நகரங்களுக்கும், வான்கூவரிலிருந்து ராலே நகருக்கும், மாண்ட்ரியலிலிருந்து ஆஸ்டின் நகருக்கும் இயக்கப்படும் விமானச் சேவைகள் இதனால் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளைத் தொடர்பு கொண்டு மாற்றுப் பயண ஏற்பாடுகள் அல்லது முழுத் தொகையையும் திரும்பப் பெறுவதற்கான வசதிகள் செய்து தரப்படும் என ஏர் கனடா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம், டொராண்டோ மற்றும் மாண்ட்ரியலில் இருந்து நியூயார்க்கின் ஜே.எஃப்.கே விமான நிலையத்திற்கான சேவைகளை அக்டோபர் 25 வரை இந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.

இதற்கிடையில், வெஸ்ட்ஜெட் (WestJet) நிறுவனமும் எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்த தனது விமானச் சேவைகளை மே மாதத்தில் 3 சதவீதமும், ஜூன் மாதத்தில் 6 சதவீதமும் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக கனடாவின் வான்வழிப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

Exit mobile version