புத்தளம் மதுரங்குளி நகரில் இன்று (08.05.2026) கொள்கலன் லொறியொன்று விபத்துக்குள்ளாகியதில் லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன் பேருந்து தரிப்பிடம் முழுமையாக சேதமடைந்துள்ளது.
மதுரங்குளி நகரின் பிரதான பாடசாலைக்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றதே விபத்துக்குக் காரணமாகியுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியோரத்தில் இருந்த பேருந்து தரிப்பிடத்தில் மோதியதில் அது முற்றாக சேதமடைந்துள்ளது.
மேலும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனமும் லொறியுடன் மோதி சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
