உக்ரைனுடனான ரஷ்யாவின் மோதல் முடிவுக்கு வருவதாக தாம் கருதுவதாகத் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் சோவியத் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மொஸ்கோவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் நடைபெற்று வரும் சிறப்பு இராணுவ நடவடிக்கை குறித்து குறிப்பிட்ட அவர், இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வருவதாக தாம் நினைப்பதாக கூறினார்.
அதேவேளையில், உக்ரைன் அரசாங்கத்திற்கு மேற்கத்திய நாடுகள் வழங்கி வரும் ஆதரவையும் அவர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களினால், இந்த ஆண்டு ரஷ்யாவின் வருடாந்த அணிவகுப்பில் வழக்கமாக இடம்பெறும் டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளின் காட்சிப்படுத்தல்கள் இடம்பெறவில்லை.
செஞ்சதுக்கத்தை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தக்கூடும் என அச்சமே இதற்குக் காரணமாகும்.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த சமரச முயற்சியால் மொஸ்கோவிற்கும் கிவ்விற்கும் இடையில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட போர்நிறுத்தம் காரணமாக, தாக்குதல் அபாயம் குறைந்ததுடன் அணிவகுப்பும் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக நிறைவடைந்தது.
வெற்றி தின உரையில் போரை நியாயப்படுத்திப் பேசிய சில மணி நேரங்களிலேயே புடினின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
அந்த உரையில், ரஷ்யா ஒரு நீதியான போரை நடத்துவதாகவும், நேட்டோ அமைப்பால் ஆயுதங்கள் வழங்கப்பட்டு ஆதரிக்கப்படும் ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக உக்ரைனை அவர் விமர்சித்தார்.
பின்னர், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவுவது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டபோது, அவர்கள் உதவி செய்வதாக உறுதியளித்துவிட்டு, ரஷ்யாவுடனான மோதலைத் தூண்டிவிட்டனர்.
அது இன்றும் தொடர்கிறது. இந்த விவகாரம் முடிவுக்கு வருவதாக நான் நினைக்கிறேன், ஆனால் இது ஒரு தீவிரமான விடயமாகும் என புடின் பதிலளித்தார்.
