மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு போர் குறுகிய காலத்தில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது நீண்ட காலம் நீடிப்பதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (01) இரவு ‘டிவி தெரண’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘360’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்த வாரம் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. பணவீக்கம் தற்போதுள்ள 5.4% – 5.5% இலிருந்து நிச்சயமாக மேலும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தரவுகளைப் பார்க்கும்போது, எரிபொருள் விலை அதிகரிப்பு ஒரு காரணம், நுகர்வில் இன்னும் சரிவு ஏற்படவில்லை. இதனால்தான் பணவீக்கம் 7% வரை உயரும் அபாயம் உள்ளது. இதைத் தடுப்பதற்காகவே கடந்த வாரம் எமது நாணயக் கொள்கையை இறுக்கமாக்கினோம். அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேவையை ஓரளவுக்குக் குறைப்பதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது நாட்டுக்கு மிக முக்கியமானது. தேவையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம்” என்றார்.
மேலும், சட்டப்பூர்வமாக உழைத்த எந்தவொரு பணத்தையும் இலங்கைக்கோ அல்லது இலங்கை வங்கிகளுக்கோ அனுப்புவதற்கு எந்தவொரு நபருக்கும் தடை இல்லை என அவர் தெரிவித்தார்.
“நாட்டின் பணமோசடி தடுப்பு சட்ட அமைப்பின் கீழ், சட்டப்பூர்வமாக உழைத்த பணத்தை வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்ப எந்தத் தடையும் இல்லை. ஆனால் சட்டவிரோதமான பணத்தை அனுப்புவது கடினம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
