மட்டக்களப்பு, திருகோணமலை வீதியிலுள்ள விடுதியொன்றில் கடந்த மே 27-ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, இரு பிள்ளைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் தந்தை, மீண்டும் எதிர்வரும் 12-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை உயிரிழந்த பிள்ளைகளின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக, சரீரப் பிணையில் விடுவிக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (01) உத்தரவிட்டிருந்தார்.
எனினும், அவரைப் பிணையில் எடுப்பதற்கு எவரும் முன்வராத காரணத்தினால், அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விடுதியறையில் கட்டில் மெத்தை தீப்பற்றி எரிந்ததில் மூச்சுத்திணறி இரு பிள்ளைகள் உயிரிழந்தனர். ஆரம்பத்தில் குழந்தைகளின் தாய்க்குப் புற்றுநோய் என்று கூறப்பட்ட போதிலும், அது பொய்யெனத் தெரியவந்துள்ளது.
தாய்க்குப் புற்றுநோய் எனப் பொய்கூறி, போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்திப் பிள்ளைகளை வைத்துப் பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அக்குரஸ்ஸைப் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை மே 28-ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் மற்றும் அரச பகுப்பாய்வுக்காக உடல் உறுப்புகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, மே 30-ஆம் திகதி சடலங்கள் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர் சடலங்களை தனது சொந்த ஊரான மாத்தறைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
உயிரிழந்த பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் பதிவு செய்யப்படவில்லை எனப் பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
அத்துடன், குறித்த நபரின் திருமணம் 2020 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில, மூத்த பிள்ளைக்கு 8 வயது எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை, அந்த மூன்று பிள்ளைகளும் அவர்களுக்கே உரியவர்களா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால், அது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தந்தைக்கும், நீர்கொழும்பைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகளுக்கும் தொடர்பிருப்பதை புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதோடு, அது குறித்த விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன
