யாழ்ப்பாணம், அச்சுவேலி தீர்த்தங்குளம் (வல்லை களப்பு) பகுதியில் நேற்று (12) இரவு கடும் காற்று காரணமாக பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
யாரோ ஒருவர் குப்பைகளுக்கு வைத்த தீ, காற்றின் வேகம் காரணமாகக் களப்பு பகுதி முழுவதும் பரவி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
பலத்த காற்று வீசியதால், தீ வேகமாகப் பரவி பல ஏக்கர் புற்தரைகள் எரிந்து சாம்பலாகின. அத்துடன், சிறிய உயிரினங்களின் வாழ்விடமாக விளங்கும் இக்களப்பு பகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் அச்சுவேலி பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். அதனையடுத்து, பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
அத்துடன் யாழ்ப்பாணம் மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, நீண்ட போராட்டத்திற்குப் பின் தீ முற்றாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
