சிவப்பு எச்சரிக்கை சந்தேகநபர்கள் இலங்கைக்கு!

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உட்பட மூன்று சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவதற்காக மலேசியாவிலிருந்து புறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் இன்று (10) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதுடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஓலுகல உள்ளிட்ட சிறப்பு பொலிஸ் குழுவினர் இவர்களை நாட்டிற்கு அழைத்து வருகின்றனர்.

இந்த மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “கஞ்சிப்பானி இம்ரானின்” முக்கிய உதவியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பாக சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மலேசியாவில் இலங்கை பொலிஸ் குழுவும் அந்நாட்டு பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போதே தனுஷ்க கௌசல்ய என்ற ரத்மலானே சைமா உள்ளிட்ட இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ரத்மலானே சைமா என்பவர் கஞ்சிப்பானி இம்ரானின் நிதி நடவடிக்கைகளை கையாண்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், கஞ்சிப்பானி இம்ரானின் சமூக ஊடக நடவடிக்கைகளையும் அவரே கையாண்டுள்ளதுடன், அவரது குரல் பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்புவதற்கும் சைமா நடவடிக்கை எடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில் கெஹெல்பத்தர பத்மே என்பவர் மலேசியாவில் தலைமறைவாக இருப்பதற்கு கஞ்சிப்பானி இம்ரானின் ஆலோசனையின் பேரில் சைமா வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிது காலம் பிரான்சில் தலைமறைவாக இருக்கும் “குடு அஞ்சு” என்பவரின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்ட சைமா, பின்னர் கஞ்சிப்பானி இம்ரானுடன் இணைந்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடு அஞ்சு என்பவர் சைமாவை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், அது குறித்து கஞ்சிப்பானி இம்ரான் சைமாவுக்கு அறிவித்த பின்னர், அவர் கஞ்சிப்பானி இம்ரானுடன் நெருக்கமாக செயல்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரத்மலானே சைமா சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொலை மற்றும் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர்களை நாட்டிற்கு அழைத்து வந்த பின்னர் மேலதிக விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

Exit mobile version