வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 நபர்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதில் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்மாவட்டத்தின் 08 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 13,139 குடும்பங்களைச் சேர்ந்த 42,429 நபர்களுக்குக் குடிநீர் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 11,142 குடும்பங்களைச் சேர்ந்த 33,394 நபர்களுக்கும், பதுளை மாவட்டத்தின் 6,653 குடும்பங்களைச் சேர்ந்த 25,413 நபர்களுக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 8 மாவட்டங்களிலுள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த 8 மாவட்டங்களிலும் 49,334 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 நபர்கள் இந்த வானிலை நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version