அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது இணைப்பு உறுப்பினராகக்கனடா இணைந்தால் அது ஒரு “பகைமைச் செயலாக” கருதப்படும் எனவும், அதற்குப் பதிலடியாக ஐரோப்பா மீது கடுமையான சுங்க வரிகள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வட கரொலைனாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கனடாவை ஒரு “மோசமான வர்த்தகக் கூட்டாளி” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அமெரிக்க அரசுத் துறைகளின் கொள்முதலில் இருந்து கனடிய தயாரிப்புகளை முற்றிலுமாக அகற்றுவதற்கான புதிய அரசாணையிலும் கையெழுத்திட்டுள்ளார்.
சுமார் 280 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க கூட்டாட்சி அரசின் கொள்முதல் சந்தையில் இருந்து கனடியப் பொருட்களை நீக்க இந்த உத்தரவு வழிவகுக்கிறது.
கனடாவின் நியாயமற்ற வர்த்தகக் கொள்கைகளால் அமெரிக்கத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவே இந்நடவடிக்கை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கனடா பிரதமர் மார்க் கர்னி, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயனைச் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளார்.
கனடாவுடனான உறவை வெறும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைத் தாண்டி உயர் மட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என உர்சுலா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் முந்தைய சுங்க வரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாகக் கனடா கொண்டு வந்த ‘Buy Canadian’ கொள்கையே தற்போதைய அமெரிக்க நடவடிக்கைக்கான காரணம் என டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் இந்த புதிய கொள்முதல் கட்டுப்பாடுகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், கனடிய வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கனடாவின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆட்டோமொபைல், எஃகு, அலுமினியம் மற்றும் உணவுப் பொருட்கள் மீது இரு நாடுகளும் மாறி மாறி விதித்து வரும் சுங்க வரிகளால் வட அமெரிக்கப் பிராந்தியத்தின் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருட்களின் விலை உயரும் எனப் பொருளாதார நிபுணர்களும் தொழிலதிபர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
