திருமணம் முடிக்கவிருந்த பெண்னை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் திருமணம் முடிக்க இருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இன்று (08) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் அம்பாறை மாவட்டத்தைச் சோந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் முடிப்பதற்காக இருந்துள்ளார். 

இந்த நிலையில் கடமையில் இருந்து விடுமுறையில் வீடு சென்ற குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் சம்பவதினமான நேற்று திருமணம் முடிக்க இருந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற நிலையில், அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து பெண் மீது பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கியதையடுத்து அவர் காயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இதனையடுத்து பொலிஸாருக்கு பெண் வழங்கிய முறைப்பாட்டையடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை இன்று வாழைச்சேனையில் வைத்து பொலிஸார் கைது செய்தனர். 

இவ்வாறு கைது செய்தவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version