தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கிறார்.
இந்நிகழ்ச்சிகளில் மாணவர்கள், விஜய் மீதான அன்பை கட்டிப்பிடித்தல், பூக்கள் கொடுத்தல், முத்தம் கொடுத்தல், புகைப்படங்கள் எடுத்தல், கவிதை வாசித்தல், பரிசுகள் வழங்குதல் என பல வழிகளில் வெளிப்படுத்துகின்றனர்.
இந்த நெகிழ்ச்சியான தருணங்களில் விஜய் பொறுமையாகவும் அமைதியாகவும் நடந்து கொள்கிறார். ஆனால், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்த அன்பு வெளிப்பாடுகளை கொச்சையாக விமர்சித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் வேல்முருகன், ‘இரண்டு கிராம் பரிசு கொடுத்து, வயது பெண்ணைக் கூட்டிப் போகிறான். அப்பா, அம்மா, ஊடகங்கள் முன்னிலையில் ஒரு சினிமா கூத்தாடியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார்கள். இது தமிழனின் ஈனப்பிறவியா?’ என அநாகரிகமாக பேசினார்.
இந்த பேச்சு இணையத்தில் வைரலாக, விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் மற்றும் இணையவாசிகள் கடும் விமர்சனம் செய்கின்றனர்.
விஜய்யின் மகளின் வயதை உடைய அல்லது இளைய மாணவிகளின் அன்பை அவமதித்ததாகவும், வேல்முருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
மாமல்லபுரத்தில் நடந்த விழாக்களில் 600 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தங்க நாணயங்களும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன. வேல்முருகனின் பேச்சு இந்த உயர்ந்த நோக்கத்திற்கு மாசு கற்பிப்பதாக அமைந்துள்ளது.