தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியவும், காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கி கொரோனா வைரஸ் உலகம் முழுக்கப் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால், பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். பின்னர் இதற்குத் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டது. அதன் பின்னரே மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. LF.7 மற்றும் NB.1.8.1 என்ற புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வகை தொற்றால் பெரிய பாதிப்புகள் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. தேசிய அளவில் 5,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், 4,724 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக, கேரளாவில் 1,679 பேர், குஜராத்தில் 615 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் 221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீரியம் குறைந்த கொரோனா தான் என்றாலும், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் தொற்று அறிகுறி இருப்பவர்களிடம் இருந்து தள்ளி இருக்குமாறும், பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் பொது சுகாதாரத்துறையில் இருந்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறந்த வீடியோக்கள்.
இந்நிலையில், கர்ப்பிணிகள் முகக் கவசம் அணிய தமிழகப் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி, உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும்.
நெரிசல் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளைச் சில நாட்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தமிழகப் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இவை, கட்டாயம் இல்லாவிட்டாலும், தங்கள் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணிவது நல்லது எனப் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.