அரசினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமைத்த உணவுகள் உரிய முறையில் பாதுகாப்பாக சென்றடைகின்றதா என்பது தொடர்பான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் பிராந்தியசுகாதார சேவை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளில் அண்மையில் உணவு ஒவ்வாமையினால் 70 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இ.உதயகுமாரின் ஏற்பாட்டில் இந்த விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இதன் போது பாடசாலைகளுக்கு உணவு வழங்குதலில் பிளாஸ்டிக் முற்றாக தடைசெய்யப் பட்டுள்ளதுடன், பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உணவு வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
உணவு தயாரித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாடசாலைகளுக்கு வழங்க முன் அதனை பாடசாலை உணவுக் குழு கண்காணிக்க வேண்டும் எனவும் இதனை பொதுச் சுகாதார பரிசோதவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் ஷாமினி ரவிக்குமார், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உணவு வழங்குனர்கள், கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள், சுகாதார சேவை திணைக்கள உயர் அதிகாரிகள், என பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.