ஜெனிவாவில் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்தான நிலை!

தமிழ் இன அடையாளங்களை மாற்றி, வடக்கு கிழக்கு சகல மக்களினதும் வரலாற்று வாழ்விடம் என்ற தோற்றத்தைக் காண்பிக்கும் வியூகங்கள் பலவற்றை கொழும்பு நிர்வாகம் ஏற்கனவே கட்டமைத்துள்ளது என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தனது சமூக ஊடக பதிவு மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “தமிழ் இன அடையாளங்களை மாற்றும் பல புதிய வியூகங்கள் திரைமறைவில் வகுக்கப்படுகின்றன. ஆனால் அதனைத் தடுப்பதற்கு அல்லது அது பற்றிய சிந்தனையே இல்லாமல் வெறுமனே உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மாத்திரமே கட்சிகள் பேசிக் கொண்டிருக்கின்றன.

உலக அரசியல் ஒழுங்கு மாறி வருகிறது. முரண்பாட்டில் உடன்பாடு என்ற போக்கில் புவிசார் அரசியல் சூழல் நிலவுகிறது. இதற்கு ஏற்ப சிங்கள அரசியல் இராஜதந்திரங்கள் கட்டமைக்கப்படுகின்றன.

குறிப்பாக இலங்கை அரச இராஜதந்திரிகள் புவிசார் அரசியல் போக்குகளை மிக நுட்பமாக, ஆராய்ந்து கட்சி அரசியலைக் கடந்து வியூகங்களை வகுக்கிறார்கள். இப் பின்னணியில் தமிழ்தரப்பின் அரசியலுக்கு சர்வதேச மட்டத்தில் மேலும் பல ஆபத்துகள் காத்திருக்கின்றன.
பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் தமக்கிடையே முரண்பட்டாலும், தமிழர் விவகாரத்தை கையாள்வதில் ஒருமித்த கருத்துடன் செயற்படுகின்றன என்பதற்கு இலங்கை இராஜதந்திர சேவை சிறந்த உதாரணம்.

இது தெரிந்த ஒரு நிலையில், கட்சி அரசியலைக் கடந்து ”பொதுப் பொறிமுறை” உள்ள தமிழ் இராஜதந்திர செயற்பாட்டுக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் எதுவும் தயாராக இல்லை.

மாறாக தேர்தல் அரசியலும் அதற்கான வியூகங்களும் மாத்திரமே விஞ்சியுள்ளன. ஆகவே, தமிழ்த் தேசியக் கட்சிகளைக் கடந்து மக்கள் சிந்தித்து விழிப்படைய வேண்டிய காலமிது” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version