இலங்கை தொழிலாளர் காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள்தான் இன்று ஆட்சி பீடம் ஏறியுள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஆட்சியமைந்ததை பொறுத்தவரையில் தாம் சந்தோசபடுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று (07) உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியபிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனால் நாங்கள் எவ்வித தவறுகளிலும் ஈடுபடவில்லை என நீதிமன்றம் ஊடாக நிருபித்து காட்டியிருக்கின்றோம்.
இவர்கள் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் கட்ந்துள்ள நிலையில் எவ்வித அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை என குற்றம் சுமத்துவது என்பது சுலோபம். மக்கள் யாருக்கு அதிகமாக வாக்களித்தார்களோ அவர்கள்தான் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பார்கள். எமது கட்சி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமல்ல பல்வேறு இடங்களிலும் இ.தொ.கா.வின் ஆதரவோடு தான் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கப்படும்.
எம்மோடு அநேகமான கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. நாங்கள் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை. தேர்தலுக்கு பிறகு அரசியல் தலைமைகளின் செயற்பாடு காரணமாக அரசாங்கத்தோடும் பேச்சுவார்த்தை நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களோடு கலந்துரையாடி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு கூறுகிறது. அத்தோடு, இன்னும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவில்லை என ஒருவர் கூறுகிறார். இதில் எது உண்மை என்று தெரியவில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து கொடுத்தால் எங்களது முழுமையான ஆதரவினை அரசாங்கத்திற்கு வழங்குவோம்.
பொதுமக்களின் பணத்தை வீண்விரயம் செய்த குற்றச்சாட்டு அடிப்படையில்தான் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் பணத்தை முன்னாள் அமைச்சர்கள் அவர்களுடைய பைகளில் போட்டுக்கொள்ளவில்லை. ஆகையால் தான் சாமர சம்பத் கூறியிருக்கிறார் யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வருமென்று, தற்போது கூட அரசாங்கம் வழங்கிய வாகனங்களை கூட அளும் தரப்பில் உள்ளவர்கள் பாவனைக்கு உட்படுத்தி வருகிறார்கள். இது அனைத்துக்கும் நீதிமன்றம்தான் பதில் கூற வேண்டும் என்றார்.