கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தக் கோரிய வழக்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தக் கோரி வழக்குத் தொடர்ந்தார்.
இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று 30 ஆம் திகதி விசாரணை நடைபெற்றது.
வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் இருந்தனர்.
அவர்களது பிரதிநிதிகளான ஜனாதிபதி சட்டத்தரணிகள் சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் பைஸர் முஸ்தபா தலைமையிலான குழு மற்றும் தவராசா கலையரசன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றில் முன்னிலையாகினர்.
இரு தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்திருந்தபோதும் மேலதிக வாதங்கள் மற்றும் சமர்ப்பிப்புகளுக்காக வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் திகதிக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது பிரதிவாதிகள் ஹரீஸ் மற்றும் கலீலுர் ரஹ்மான் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
