இந்தியாவின் சத்தீஸ்கரின் பஸ்தார், பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் நேற்று (27) கனமழை பெய்தது. ஹெலிகாப்டர்கள், படகுகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் ஏராளமானவர்களை வெள்ள பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.
பஸ்தார் மாவட்டத்தில் கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய கால்வாயை ஒரு கார் கடக்க முயன்றது. அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் அந்த தம்பதியினர், இரண்டு மகள்களுடன் இறந்தனர்.
விசாரணையில் அந்த காரில் பயணித்தது தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்து உள்ளது.
இறந்தவர்கள் ராஜேஷ்குமார் (வயது 43), அவரது மனைவி பவித்ரா (40), அவர்களது 2 மகள்கள் சவுஜன்யா (7) மற்றும் சவுமியா (4) என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
ராஜேஷ்குமார், ராய்ப்பூரில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார். அவர் குடும்பத்தினருடன் பஸ்தாருக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தார். கடந்த 26 ஆம் திகதி கால்வாயில் வெள்ளத்தை கடக்க முயன்றபோது அவர்களது காரை வெள்ளம் இழுத்துச்சென்றது. அன்று மாலையில் கால்வாயில் நீர்மட்டம் குறைந்தபிறகு 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 4 பேரும் திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 4 பேரின் உடல்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.