No products in the cart.
கனடாவில் அமெரிக்க தூதரகம் அருகில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!
கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதிலும், கட்டிடத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நான்கு மாத காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் பதிவான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மார்ச் 10 ஆம் திகதியும் இந்தக் கட்டிடத்தை இலக்கு வைத்து பல துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
டொராண்டோ பகுதியில் உள்ள யூத தொழுகைக்கூடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்தே இச்சம்பவமும் இடம்பெற்றிருந்தது.
இதன் காரணமாக, கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களின் முன்பாகப் பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
டொராண்டோ பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பணம் கொடுத்து, யூத தொழுகைக்கூடங்கள், யூத பாடசாலைகள் மற்றும் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தூண்டப்பட்டுள்ளமை தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
மார்ச் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அந்த நடவடிக்கையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.















