மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம்

2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில் சுமார் 500 பேர் தமது யோசனைகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்ததாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு, நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்தக் கருத்து சேகரிப்பு நடவடிக்கைகள் செப்டம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமாகின. 

இறுதி அமர்வு மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு, நேற்று (08) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த அமர்வுகளில் முன்வைக்கப்பட்ட அனைத்து யோசனைகளையும் கருத்தில் கொண்டு, மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், இலங்கை மின்சார சபை (CEB) சமீபத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தனது முன்மொழிவில், மின்சார கட்டணங்களை 6.8 சதவீதம் உயர்த்துவதற்கு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version