Gotabaya Rajapaksa காலத்தில் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சிரேஷ்ட நீதிபதி ஜனத் சில்வா வெளியிட்டுள்ள அறிக்கையை சில காலம் மறைத்து வைத்திருந்தார்.

அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவும் குண்டுத் தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை மறைத்தே வைத்திருந்தார் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவே அந்த அறிக்கைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கி விசாரணைகளை நடத்துமாறு அறிவித்தார்.

குறித்த அறிக்கைகளில் உள்ள 37500 பக்கங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு 10 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதில் உள்ள சில குற்றச்சாட்டுகளுக்கு குற்றவியல் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.அது தொடர்பில் சட்ட அதிபர் திணைக்களத்துடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பயந்தவர்கள் பல்வேறு பிரதான சூத்திரதாரிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கின்றனர்.பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் அவை பின்னால் செல்ல முடியாது.

அத்தோடு பொலிஸ் திணைக்களத்திற்கும் இதற்காக விசாரணைகள் நடத்த முடியாது.

நாங்கள் நீதியான பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தியுள்ளோம்.அதில் சிலர் நேரடியாக தொடர்பு பட்டிருந்தமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து சிலரை நாங்கள் கைது செய்துள்ளோம்.

இதற்கான விசாரணைகள் நடைபெறுகின்றன.விரைவில் இந்த குண்டு தாக்குதலுக்கு உதவி செய்தவர்கள் மற்றும் சூத்திரதாரிகள் யார் என மக்கள் அறிந்து கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version