கடலில் பயணம் செய்வோர் மற்றும் மீனவர்களுக்கு விசேட எச்சரிக்கை


நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம்  தொடர்ந்தும் காணப்படுகின்றது. இத் தொகுதி இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 36 மணித்தியாலங்களில் படிப்படியாக வலுவிழக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, எதிர்வரும் நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மற்றும் மழை பெய்யும் தன்மை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக  வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக  அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.


அதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும் என்பதுடன், காற்றின் வேகம் மணிக்கு 25-35 கி.மீ அளவில் காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக இக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக அமையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியம் உள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இக்கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Exit mobile version