சில பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்தில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. 

இன்று (15) முற்பகல் 8:00 மணிக்கு அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குடா கங்கை உப-பள்ளத்தாக்கின் மேல்நிலைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு, தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய, ஆற்று நீர்மட்ட அளவீடுகள் மற்றும் மழைவீழ்ச்சி தரவுகளின் பகுப்பாய்வுகளின்படி, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட குடா கங்கை மற்றும் மகுர கங்கை ஆகியவற்றின் வான்பாயும் சமவெளிப் பகுதிகளிலுள்ள தாழ்நிலங்களில் சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, குடா கங்கை மற்றும் மகுர கங்கை ஆகியவற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகள் ஊடாகச் செல்லும் வீதிகள் நீரில் மூழ்கக்கூடிய அதிக அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version