மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை சாட்சியத்திற்கு அழைக்க இடைக்காலத் தடை

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு ஒன்றில் சாட்சியமளிப்பதற்காக, அவிசாவளை மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டாரவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய நடவடிக்கை எடுப்பதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

ஜனாதிபதி சட்டத்தரணிகளான உதித இகலஹேவா, ஃபர்மான் காசிம் மற்றும் சட்டத்தரணி சுகத் கல்தேரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் சாட்சியமளிப்பதற்காக ஆஜராகுமாறு, அவிசாவளை மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டாரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதாக மனுதாரர்கள் இந்த மனுவின் மூலம் தெரிவித்துள்ளனர். 

சஹன் மாபா பண்டார, நுகேகொட மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய போது பிறப்பித்த உத்தரவு ஒன்று குறித்து விசாரிப்பதற்காக, அவரை இவ்வாறு சாட்சியமளிக்க அழைப்பதற்கு அரச தரப்பு தீர்மானித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீதிபதி ஒருவர் ஆற்றிய உத்தியோகபூர்வ கடமை தொடர்பாக விசாரிப்பதற்காக அவரை சாட்சியத்திற்கு அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அது நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அதன்படி, சம்பந்தப்பட்ட நீதிபதியை சாட்சியத்திற்கு அழைப்பதற்காக விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணையை ரத்துச் செய்யுமாறு உத்தரவிடுமாறும், இந்த மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை அந்த அழைப்பாணையின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர். 

இந்த மனு மீண்டும் ஜூன் மாதம் 12ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.

Exit mobile version