ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று (13) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரரான ‘மோதர சதுர’ மற்றும் ‘புளுமெண்டல் சங்க’ ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
25 வயதான ‘மோதர சதுர’ என்ற சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று முற்பகல் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு எதிராக 2019ஆம் ஆண்டில் கஞ்சா வைத்திருந்தமை, 2020ஆம் ஆண்டில் தடியடி மற்றும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி ஒருவரை காயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டும், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு இலக்கம் 04 பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் இருந்துள்ளன.
அதேபோல், கைது செய்யப்பட்ட ‘புளுமெண்டல் சங்க’ கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
இவர் 2010ஆம் ஆண்டில் நபர் ஒருவரைத் தாக்கியமை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதுடன், 2015ஆம் ஆண்டில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திலும் ஒரு சந்தேகநபராவார்.
மேலும், 2016ஆம் ஆண்டில் மாளிகாவத்தை பகுதியில் சிறைச்சாலை பேருந்து ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உடந்தையாக இருந்தமை, துப்பாக்கி மற்றும் தோட்டாட்களுடன் கைது செய்யப்பட்டமை மற்றும் 2018ஆம் ஆண்டில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்து மேலும் மூவருக்கு பலத்த காயம் ஏற்படுத்தியமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலும் இவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
