சர்வதேச தந்தையர் தினம் (Father’s Day) இன்றாகும் (21).
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உலகளவில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வ பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், உலகின் பல நாடுகள் தந்தையர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்நாளைச் சிறப்பு விழாவாகக் கொண்டாடுகின்றன.
தந்தையர் தினத்தின் ஆரம்பம் 1910 ஆம் ஆண்டுக்கு முற்பட்டதாகும். இது முதன்முதலில் அமெரிக்காவில் தொடங்கப்பட்டதுடன், தந்தையர்களைக் கௌரவிப்பது பற்றிய யோசனையை வொஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டாட் (Sonora Smart Dodd) என்பவர் பிரபலப்படுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.
இவரது தந்தை ஒரு இராணுவ வீரராவார். அத்துடன், தாய் இல்லாத ஒரு குடும்பத்தில் ஆறு குழந்தைகளைத் தனியாக வளர்த்தெடுத்த ஒரு அமைதியான வீரன் என்றும் அவர் போற்றப்படுகிறார்.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வொஷிங்டன் மற்றும் மேற்கு வர்ஜீனியாவில் தந்தையர்களைக் கௌரவிக்கும் சிறப்பு விழாக்கள் நடத்தப்பட்டதுடன், 1910 ஆம் ஆண்டில் முதல் அதிகாரப்பூர்வ கொண்டாட்டம் அமெரிக்காவின் ஸ்போகேன் (Spokane) நகரில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர், 1972 ஆம் ஆண்டில் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் (Richard Nixon) இதனை ஒரு தேசிய விடுமுறை நாளாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
தந்தையர்கள் என்பவர்கள் பெரும்பாலும் அமைதியாகவே அன்பு செலுத்தும், வியர்வையாலும் கண்ணீராலும் குடும்பத்தைப் பாதுகாக்கும் வலிமையானவர்கள் ஆவர். அவர்களின் அர்ப்பணிப்பு பெரும்பாலும் வார்த்தைகளால் அல்லாமல், செயல்களாலேயே வெளிப்படுத்தப்படுகிறது.
அம்மா நிலவைப் போலக் குளுமை தந்து நிழல் கொடுக்கும் உலகில், அப்பா சூரியனைப் போல வெப்பத்தையும் ஆற்றலையும் வழங்கி, குடும்ப வாழ்க்கைக்கு ஒளியூட்டுகிறார். அவரது அமைதியான போராட்டம், அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இன்றைய நாளில் சிறப்பாக நினைவு கூரப்பட்டு, மரியாதையுடன் கொண்டாடப்படுகின்றன.
