நாயை உதைத்துத் துன்புறுத்திய சந்தேக நபர் கைது


கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்துத் துன்புறுத்திய சந்தேக நபரை, கல்முனை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இச்சம்பவம் இன்று (27) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பிரதம பரிசோதகருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் 21 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நாய், யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டு வரும் குழுவினரோடு பயணித்து வரும் ‘சுப்பிரமணியன்’ எனும் பெயருடைய நாய் என்பதாகும்.

கல்முனைப் பிரதேசத்தில் வைத்துச் சந்தேக நபரினால் அந்நாய் தாக்கப்பட்டுள்ளமை மனிதாபிமானமற்ற செயலாகும் என இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

சுமார் 450 கிலோமீற்றர் தூரம் பயணித்து வந்த குறித்த சுப்பிரமணியன் எனும் நாய் தாக்கப்பட்டமை சமூக ஊடகங்களில் வைரலானதுடன், பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், நாயைத் தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறித்த நாய் தன்னால் துன்புறுத்தலுக்கு உள்ளானமை குறித்து மன்னிப்புக்கோரி இருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் வழிகாட்டலில், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆராச்சியின் ஆலோசனைக் கமைய, கல்முனைப் பிராந்திய பதில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி. தந்தநாராயணவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Exit mobile version