காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உள்ளூரில் உள்ள காஷ்மீர் ஆதரவாளர்கள் (காஷ்மீரி ஓவர்கிரவுண்ட் ஒர்க்கர்ஸ் – ஓஜிடபிள்யூ) உதவி செய்துள்ளதை புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தீவிரவாதிகள் தங்குவதற்கு இடம், உணவு போன்ற வசதிகளை செய்து கொடுப்பவர்களை ஓவர்கிரவுண்ட் ஒர்க்கர்ஸ் என்று அழைக்கின்றனர். இதுகுறித்து புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று குறிப்பிடுகையில்,
பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உள்ளூர் ஆதரவாளர்கள் 15 பேர் உதவியது எலக்ட்ரானிக் கருவிகளை ஆய்வு செய்த போது தெரிய வந்தது.
முக்கிய குற்றவாளிகளாக 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் பிடிபட்டுள்ளனர். மற்ற 2 பேரை தீவிரமாக தேடி வருகிறோம். தாக்குதல் நடந்த 22 ஆம் திகதி வரை அவர்களுடைய தொலைபேசிகள் உட்பட இலத்திரனியல் கருவிகள் இயங்கியுள்ளன. அதன்பிறகு அவை அணைக்கப்பட்டுள்ளன.
மேலும் மற்ற 10 பேரிடம் என்.ஐ.ஏ, காஷ்மீர் பொலிஸ், புலனாய்வு பிரிவு, ரோ போன்ற அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இன்னும் பஹல்காம் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
தாக்குதல் நடந்த கடந்த 6 நாட்களில் 10 தீவிரவாதிகளின் வீடுகளை இந்திய பாதுகாப்புப் படையினர் இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.