சிறிலங்கா கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர்களை அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் என்று கருதி தடுத்து வைக்கும் வரியை வசூலிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எடுத்த முடிவுக்கு எதிராக கிரிக்கெட் வீரர்கள் தாக்கல் செய்த மனு தொடர்பாக இன்று (03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமரசம் செய்யப்பட்டது.
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க மற்றும் டெஸ்ட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தது.
இதன்போது பிரதிவாதியான உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சமர்ப்பித்த சமரச முன்மொழிவுகளுக்கு மனுதாரர்கள் ஒப்புக்கொண்டனர்.
அதன்படி, கிரிக்கெட் வீரர்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த சிறிலங்கா கிரிக்கெட் சபை ஒப்புக்கொண்டதுடன், அதில் அறவிடப்பட வேண்டிய தடுத்து வைக்கும் வரியை ஜூன் மாதம் முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அனுப்பவும் இணக்கம் காணப்பட்டது.
இந்த வழக்கில் மனுதாரர்களான கிரிக்கெட் வீரர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்திருந்தால், இந்த வழியில் வசூலிக்கப்பட்ட தடுத்து வைக்கும் வரியை திருப்பி செலுத்துவதற்கும் இணக்கம் ஏற்பட்டிருந்தது.
மேலும், பல விடயங்களில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் எட்டப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நிஷான் பிரேமதிரத்ன இணக்கம் வௌியிட்டதுடன், அதே நேரத்தில் இலங்கை கிரிக்கெட் சபை சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி குவேரா டி சொய்சாவும் இணக்கம் வௌியிட்டார்.
அதன் பிறகு, மனுவுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதிக்கு முன்பு தாக்கல் செய்யுமாறும், செப்டம்பர் 29 ஆம் திகதிக்கு முன்பு அதற்கு ஏதேனும் ஆட்சேபனைகளை இருந்தால் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர், மனு விசாரணை நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.