கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி இன்று புதிய சட்ட மூலத்தை தாக்கல் செய்ய உள்ளார்.
இது, எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கனடா மத்திய அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை விளக்கும் முக்கியமான சட்ட முன்மொழிவாகும். அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்தும் சட்டங்களை கொண்டு வருவதாகவும், உயிருக்கு ஆபத்தான பெண்டனில் மற்றும் அதனுடைய மூலப்பொருட்களின் கடத்தலைத் தடுக்க பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு புதிய கருவிகளை வழங்குவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்த புதிய சட்ட மூலம், கனடா எல்லை சேவைகளுக்கான நிறுவனத்துக்கு (Canada Border Services Agency) கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.
இது, சட்டவிரோத பொருட்கள் மற்றும் திருடப்பட்ட கார்கள் கொள்கலன் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்ய புதிய சட்ட மூலத்தில் அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
பெண்டனில் மற்றும் சட்டவிரோத குடிபெயர்வுகளை சமாளிக்க கனடா போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் புரிந்து கொள்ளச் செய்ய லிபரல் கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர்.
அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படும் போதை மருந்துகள் மற்றும் குடிபெயர்வாளர்களை காரணமாக்கி, டிரம்ப் கனடிய இறக்குமதிகளுக்கு மேலதிக வரிகள் விதித்திருந்தார்.
இப்போது தாக்கல் செய்யப்படும் சட்டமூலம், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும்.
அதில், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களைப் பயன்படுத்தி எல்லைப் பகுதியில் முழுநேர கண்காணிப்பு உள்ளிட்ட அம்சங்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.