இலங்கை

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவ ADB உறுதி

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் என அதன் புதிய வதிவிடப் பணிப்பாளர் ஷானன் கவ்லின் (Shannon Cowlin) தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய வதிவிடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கவ்லின், நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார். 

பல ஆண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்காளித்துவத்தின் அடிப்படையில், இலங்கையுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

புதிய வதிவிடப் பணிப்பாளரை ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிராந்தியப் பணிப்பாளர் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தினார். 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறித்து தூதுக்குழுவினர் தமது திருப்தியை வெளியிட்டனர். 

அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுத்துள்ள துரித நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. 

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எட்டப்பட்ட பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள், குறிப்பாகப் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்குப் புலப்படும் வகையில் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

மலையகப் பிரதேசங்களில் நிலவும் நீண்டகாலச் சூழலியல் பாதிப்புகள் குறித்து விளக்கிய ஜனாதிபதி, அச் சூழல் மண்டலங்களை மீட்டெடுத்தல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்தர வாழ்வாதாரங்களை அமைத்துக்கொடுத்தல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார். 

இச்சவால்களை எதிர்கொள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் ஒத்துழைப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார். 

2026 ஆம் ஆண்டு முதல் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள், எதிர்பார்க்கப்படும் வரவுசெலவுத் திட்ட ஒத்துழைப்பு மற்றும் இவ்வருட நடுப்பகுதியில் இடம்பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரின் இலங்கை விஜயம் உள்ளிட்ட எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.



What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…