No products in the cart.
மண்சரிவு அபாயம் – 47 குடும்பங்கள் வெளியேற்றம்!
மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் நிலவும் கடும் மழை காரணமாக, கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள 47 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, பம்பரபெத்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 40 குடும்பங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் கேகாலை மாவட்டத்தின் மாவனல்லை, கோவில்கந்த பகுதியில் 2 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மாத்தளை மாவட்டத்தின் கலகல்தென்ன பகுதியில் 5 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், கண்டியின் யட்டிநுவர, தொலுவ, உடுதும்பர மற்றும் கங்கா இஹல கோரளை ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு (நிலை 3) எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
இந்தநிலையில் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமை காரணமாகக் கண்டி மாவட்டத்தின் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பேராதனை வீதியின் கொஹகொட மற்றும் ஹல்லொலுவ இடையிலான பகுதி பாறை சரிவினால் மூடப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
















