No products in the cart.
வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு; முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம்
வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்க விருந்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா பதிவிட்டுள்ளதாவது,
“நேற்றிரவு (சனிக்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் உள்ள நோக்கம் தொடர்பில் இன்னும் முழுமையான விபரங்கள் தெரியவில்லை. இருப்பினும், நமது ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமுண்டு என்ற எண்ணத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிராகரிக்க வேண்டும்.
இரகசிய சேவை அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் காட்டும் துணிச்சலையும் தியாகத்தையும் இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது. காயமடைந்த அதிகாரி நலமடைந்து வருவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த சம்பவத்தை ஒரு ‘கொடூரமான தருணம்’ என வெள்ளை மாளிகை நிருபர் சங்கத்தின் தலைவர் வெய்ஜியா ஜியாங், விவரித்துள்ளார். ஆயிரக்கணக்கான விருந்தினர்களைப் பாதுகாத்த இரகசிய சேவை மற்றும் சட்ட அமலாக்கத் துறையினரின் துரித நடவடிக்கையை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
சந்தேக நபர் ஒரு சில முறை மட்டுமே சுட முடிந்ததாகவும், பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி அவர் நுழைந்த உடனேயே அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்ததாகவும் பதில் தலைமை சட்ட அதிகாரி டோட் பிளான்ச் தெரிவித்துள்ளார்.
துப்பாகிச்சூட்டை நடத்திய கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேசமயம்இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியிலும்,ஜனாதிபதி ட்ரம்ப் நேட்டோ நாடுகள் தொடர்பில தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பாவைப் பாதுகாக்க அமெரிக்கா ‘டிரில்லியன் கணக்கான டொலர்களை’ செலவிட்டுள்ளதாகவும், ஆனால் நேட்டோ நாடுகளிடமிருந்து போதிய ஆதரவு கிடைப்பதில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.















