No products in the cart.
2 மாதங்களாக தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை
வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர காலங்களில் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் கால்நடை வைத்திய அதிகாரிகளின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் மிருகக்காட்சிச்சாலை கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலதிக சேவை நேரக் கொடுப்பனவை வழங்குதல், அபாயக் கொடுப்பனவை வழங்குதல், விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கடமையாற்றும் முறையை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல் அந்த சங்கம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது.
இதன்படி, இரண்டரை மாதங்களுக்கும் மேலாக வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க அதிகாரிகள் இதுவரை தவறியுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் மிருகக்காட்சிச்சாலை கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நிஹால் புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.
தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் வைத்தியர் நிஹால் புஷ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்.














