இலங்கை

தொற்றா நோய்களினால் இலங்கையில் 80% மரணங்கள்

இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 80% இற்கு தொற்றா நோய்களே காரணம் என்றும், அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயே முன்னணியில் உள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

இந்த இரு நோய்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்வதன் மூலம் ஒருவரது ஆரோக்கியத்தில் பல தீவிர சிக்கல்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இதன் மிகக் கொடூரமான விளைவு மாரடைப்பு ஏற்படுவதாகும் என்றும் வலியுறுத்தினார். 

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நவீன இதய சிகிச்சை வளாகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நேற்று (16) பிற்பகல் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அணில் ஜாசிங்க, 

நமது நாட்டில் ஏற்படும் மொத்த மரணங்களில் 80% இற்கு தொற்றா நோய்களே காரணமாகின்றன. இவ்வாறு உயிரிழக்கும் 80% பேரில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயே முன்னணியில் உள்ளன. இவற்றை நாம் ‘NCDs’ (தொற்றா நோய்கள்) என அழைக்கிறோம். 

இதில் உள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால், இந்த இரண்டு நோய்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு, ஒருவரது ஆரோக்கியத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாகும். இலங்கையின் தற்போதைய நிலைமையைப் பார்த்தால், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 50% மட்டுமே பயனுள்ள கட்டுப்பாட்டில் உள்ளனர். 

அதேபோல், நீரிழிவு நோயாளிகளில் 25% போன்ற சிறிய சதவீதத்தினரே சரியான கட்டுப்பாட்டில் உள்ளனர். இந்த நிலைமையினாலேயே இன்று இது சமூகத்தில் ஒரு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. 

இந்த இரண்டு நோய்களினதும் மிக மோசமான சிக்கல் ‘MI’ அல்லது மாரடைப்பு ஏற்படுவதாகும். பிரதான சிக்கலாக மாறுவதும் இதுவேயாகும். 

அப்படியென்றால், இந்த நவீன தொற்றுநோயை நாம் எவ்வாறு கட்டுப்படுத்துவது? நமது முன் உள்ள மிகப்பெரிய சவால் இதுவேயாகும். 

நாடு முழுவதும் நவீன வசதிகளை ஏற்படுத்துவதுடன், நமது சுகாதார அமைப்பானது நாட்டின் மக்கள் தொகை வடிவமைப்பு மற்றும் நோய் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடையாளம் காண வேண்டியிருந்தது. 

அதற்கேற்ப, நமது சுகாதார அமைப்பையும் அதற்கு ஏற்ற நடைமுறைகளுக்கு மாற்றியமைக்க வேண்டும். 

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய, சுகாதார அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவது இத்தகைய ஒரு பாரிய வேலைத்திட்டமாகும். 

இதில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. ஆரோக்கியா (Arogya), கொத்தணி அமைப்புகள் மற்றும் உயர்நிலை பராமரிப்பு நிறுவனங்கள் ஆகிய மூன்றையும் நமது சுகாதார அமைப்புக்கு ஏற்ற வகையில் வடிவமைப்பது எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…